நான் அவிழ்வதற்காகவே மலர்ந்திருக்கிறாய் நீ.
விரல் மடித்து உன்மனம் தட்ட
விரும்பியே சாத்தியிருக்கிறாய்
நிலை கொள்ளாத உன் கதவுகளை.
அறைந்து அறைந்து
பொத்துப் போயின என் உள்ளங்கைகள்
- உள்ளது உள்ளமில்லை என்றறியாமல்.
உரையாடல் என்பதன்
உண்மைப் பொருளறியாமல்
ஒற்றையாய் என் குரலுயரும் போதெல்லாம்,
செவிட்டில் அறைவது போலிருக்கும்.
என் காலத்தின் கால்களை
தேய்க்க நினைத்தாயோ என்னவோ?
காத்திருப்புகளுக்கு உன் காது நீளவே இல்லை.
எத்தனை முறை
என்னை வீசி எறிந்தாலும்,
பள்ளமாய் வீழ்கிறேன்
உன் நினைப்பில்.
ஆயினுமென்ன?
உன்னை நினைத்து நினைத்து மகிழ்வதில்
என் தலையில் முடிகளுடன்
முட்களும் தோன்றலாம்.
- கூடவே சில ரோஜாக்களும் தான்.
தொடரட்டும் கவிப் பணி..
ReplyDeleteஅய்யா பிரபு அவர்களே ,நன்றாகவே இருக்கிறது உமது கவிதைகள்
ReplyDelete