25 Oct 2012

கல்லறைத் திருநாள்

* "அசையாமல் படுத்திருப்பது
   அசௌகரியமாகத் தான் இருக்கிறது"
    - மௌனத்தின் அடித் தொண்டையில்,
    மெல்ல ஆரம்பித்தார் ஸ்தனிஸ்லாஸ்.

* "அருகே தான் நானும் இருக்கிறேன்
    அப்படியொன்றும் தெரியவில்லையே?"
    அலுத்துக் கொண்டார்
    ஆரோக்கிய ராஜ்.

* 'உனக்கென்னப்பா...
   மடிப்புக் கலையாத
   மண் தரை; சுகமாகத் தானிருக்கும்.
   - நான் சவமான பின்னரும்
     சலவைக் கற்களையல்லவா சுமக்கிறேன்?'

* 'சற்றுப் பொறு.
   இன்ஸ்டன்ட் சாம்பிராணி
   இங்கெப்படி வந்தது?
   இன்றைக்கொன்றும் என்
    இறந்த நாளில்லையே?'

* ஆரோக்கியராஜ்
   அவசரமாய் பதிலளித்தார்.
   - 'இது கூடத் தெரியாதா?
      இன்றைக்குத் தான்
      இறப்புக்குப் பிறந்த நாள்!
     இன்றைக்காவது
     இனிப்பு கிடைக்கிறதா பார்ப்போம்'.
   - இயலாமையை
     இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

* கசகசக்கும் சப்தம் கேட்டு
   கவனிக்க ஆரம்பித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
   - பாரம் தாங்க மாட்டாமல்
     பதறிக் கொண்டிருக்கிறேன் நான்.
    இதென்ன,
     பாம்பே ஸ்வீட் ஸ்டால்
     பாலித்தீன் பை?

* பேசாமல் இரு.
    பிரித்துப் பார்த்தால் தானே தெரியும்?!
    - ஆரோக்கிய ராஜுக்கும்
      ஆர்வம் தாளவில்லை.

* யார் யாரோ வந்துள்ளனரே?
   யாரையாவது அடையாளம் தெரிகிறதா?
   - ஆரோக்கிய ராஜ்.

* ஏன் தெரியாமல்?
   என் மகன்
   என் மனைவி
   என் உறவினர்
   என் மகனின் சக ஊழியன் செல்வன்.குணாநிதி.

* யாரந்த மரமனிதன்?
   பட்டைக்குள் நெற்றி புதைத்து,
  காரணமில்லாமல்
  கண்களை மூடி
  கண்ணீர் வடிக்கிறான்?
  கல்லறைத் தோட்ட ஊழியனும்
  கட்டையாகத் தானே இருப்பான்?

* மயானக் கொல்லையில் என்ன
   மசமசவென பேச்சு?
   சட்டெனப் பிரித்தால்
   பட்டெனத் தின்கலாமே?
   - சந்திரகலாவில் இருந்தார்
     சந்தர்ப்பம் புரியாத ஆரோக்கியராஜ்.

* ஜானின் அம்மா நாவில்
   ஜனித்தன இரண்டு வார்த்தைகள்.
    ' ரொம்ப நன்றிப்பா!'

* எந்தக் கேள்விகளுமின்றி
   ஏன் இந்தப் பதில்?
    - குறுக்கே மறித்தான்
      குறும்புக்கார குணாநிதி.

* சுகமோ துக்கமோ
   பங்கு கொள்வதில் பிறரின் பங்குமுண்டு.
   - அவசர தொனியில்
      அள்ளி முடித்திட்டார் அம்மா.

* சவ்வுகளாய் சிதைபட்டான் ஜான்.
   முற்றிலும் எதிர்பார்க்கவில்லை
    இம் முதிர்ந்த பதிலை.

* பள்ளியிடம் தோற்றுப் போனது
   பழகத் தெரியாத கல்லூரி!

* திடீரென கடகடவென சிரித்தார் ஸ்தனிஸ்லாஸ்.
   சிரிப்பினூடே
   சில்லறையாய் சில வார்த்தைகள்.
    ' கல்லறைத் தோட்டத்தினுள்
     சில ஆவிகள் புகுந்துவிட்டன.